மூலம்

ஆண் மூலம் அரசாளும். பெண் மூலம் நிர்மூலம் என்றொரு ஜோதிட வழக்கு மொழி சொல்வார்கள். மூலத்தில் பெண் பிறந்தால் திருமண நேரம் வரும்போது இதைச் சொல்லிச் சொல்லி பயமுறுத்துவார்கள். பெண் மூலம் நிர்மூலம் என்பது பழமொழி அல்ல. அது பெண்ணினத்தின் மீது சொன்ன பழிமொழி. அந்த சொற்றொடரே தவறானது. ஆனி மூலம் அரசாளும், பின் மூலம் நிர்மூலம். அதாவது மூலம் நட்சத்திரத்தின் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் பிரச்னைகளை எதிர்கொள்ளும் மகத்தான ஆற்றலையுடையவர்கள். எதிர்த்து நின்று போராடி ஜெயிப்பார்கள். எப்பேர்பட்ட கோட்டையையும் தமது வீரத்தால் தகர்ப்பார்கள் என்பதுதான் இதன் பொருள். கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் போகத்திலிருந்து யோகப் பாதைக்கு திரும்புவீர்கள். எது எதில் என்னென்ன இருக்கிறது என்று பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். ஆன்மிகத்தையே விஞ்ஞானப் பார்வையாக பார்க்கும் விவேகம் இருக்கும். ஆடல், பாடல், இசை என்று ஏதேனும் ஒன்றில் பரிமளிப்பீர்கள். இருந்தாலும் ஒரு கூச்ச சுபாவமும், தடுமாற்றமும் இருக்கும். ஆனால், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளுதலில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களிடத்தில் ஈர்ப்பு இருப்பதால் எல்லோரின் மீதும் மெல்லிய அலட்சியம் ஏற்படும். அதனால் பல விஷயங்கள் தெரியாமல் போகும் அபாயம் உண்டு. போராடக் கூடிய ராசியான தனுசு ராசியில், தேடலோடு உள்ள கேது நட்சத்திரத்தை அதிபதியாக கொண்டு பிறந்தவர்கள் நீங்கள். கேதுவின் ஆதிக்கத்தில் கொஞ்சம் சக்திவாய்ந்த நட்சத்திரம் இதுவேயாகும். சட்டென்று எதையும் எதிர்க்கத் தோன்றும். வீரமும், ஞானமும் ஒருசேர கலக்கும் ஒரு நட்சத்திரம் என்பதால் சமநிலை தெரியாது குழம்புவீர்கள். உங்களுடைய அபரிமிதமான சக்தியை ஆக்கவழியில் செயல்படுத்த உதவும் ஒருதலமே திருவதிகை. இத்தலம் பண்ருட்டிக்கு அருகே உள்ளது. இறை தேடலோடு இருந்த அப்பரடிகளை சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறச் செய்த அற்புதத் தலம். இக்கோயிலின் கொடிமரத்திற்கும், அப்பரடிகளுக்கும் ஞானம் புகட்டிய தலம். அதே சமயம் இத்தல ஈசனான திரிபுராந்தகர் மூன்று அரக்கர்களான தாரகாட்சன், கமலாட்சகன், வித்யுன்மாலி என்போரை ஈசன் தனது புன்னகையாலேயே எரித்தார். இத்தலத்தை தரிசித்து வாருங்கள். உங்கள் வாழ்க்கை வளம் பெறும் பாருங்கள்….

Related posts

மதுரை ஏர்போர்ட் இன்றுமுதல் 24 மணி நேரமும் செயல்படும்: விமான நிலைய இயக்குநர் தகவல்

ஏகனாபுரம் கிராமத்தில் 445 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு

குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் கணவனை சம்மட்டியால் தாக்கிய மனைவி