செங்கல்பட்டு: முதாட்டியை கொலை செய்த வழக்கில், வீட்டு வேலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை பம்மல் பகுதியில் வசித்தவர் யுவான் பெர்ணான்டஸ் (70). இவரது வீட்டில் பல்லாவரத்தை சேர்ந்த சிவக்குமார் (50) என்பவர் வீட்டு வேலைகளை செய்து வந்தார். கடந்த 2012 மார்ச் 3ம் தேதி, யுவான் பெர்ணான்டஸ் வீட்டில் இருந்த ₹2 ஆயிரத்தை சிவக்குமார் திருடினார். இதுகுறித்து, சங்கர் நகர் போலீசில் மூதாட்டி புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் சிவக்குமாரை கைது செய்து, ஒரு மாதம் சிறையில் அடைத்தனர். இதனால், ஆத்திரமடைந்த சிவக்குமார், ஜாமீனில் வெளிவந்தவுடன், தன் மீது புகார் கொடுத்து, சிறையில் அடைத்த மூதாட்டியை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, கடந்த 2012 ஜூன் 30ம்தேதி யுவான் பெர்ணான்டஸ் வீட்டில் தனியாக இருந்தபோது, அவரை கொலை செய்ய சிவக்குமார் முயன்றார். மூதாட்டி அவரிடம் இருந்து தப்பி படுக்கையறைக்கு சென்றார். அங்கு சென்ற சிவக்குமார், நைலான்கயிற்றால் மூதாட்டியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். இதில் மூதாட்டி துடிதுடித்து இறந்தார். இதுதொடர்பாக, சங்கர்நகர் போலீசார் வழக்குபதிந்து சிவக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதையொட்டி வழக்கின் விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி என்.வசந்தலீலா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முதாட்டியை கொலை செய்தது நிரூபிக்கப்பட்டதால், சிவக்குமாருக்கு ஆயுள்தண்டனை வழங்கி உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் எம்.சதிஷ்பாபு ஆஜரானார்….