கோவை, ஜன.5: கோவை மாவட்டம், சூலூர் ஜே. கிருஷ்ணாபுரம் வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள வண்டி பாதையை கிருஷ்ணசாமி என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிகிறது. விவசாயிகளுக்கு இவர் பாதையை தராமல் ஆக்கிரமிப்பு செய்துவிட்டதால் பாதிப்பு அதிகமாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்த பாதையை வண்டி பாதையாக மாற்றம் செய்து தராமல் தொடர்ந்து காலம் கடத்தி வருவதாக கோவை தெற்கு ஆர்டீஓ அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தனர்.
ஆனால் இதற்கு தீர்வு காணப்படவில்லை. இதை கண்டித்து விவசாயிகள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை விவசாயிகள் குவிந்தனர். அங்கே கோட்டாட்சியரின் செயல்பாடுகளை கண்டித்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் 6 பெண்கள் உள்பட 60 பேரை கைது செய்தனர். இதன் காரணமாக கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.