ஈரோடு, ஆக.5: ஈரோடு அடுத்த கனிராவுத்தர் குளத்தில், தனியாருக்கு சொந்தமான கோவிலில் இருந்து, முறைகேடாக மின்சாரம் எடுத்து பயன்படுத்திய 2 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஈரோடு அடுத்த கனிராவுத்தர் குளத்தில் 18 கிராமங்களுக்கு சொந்தமான எல்லை மகாகாளியம்மன் கோவில் உள்ளது. மின்வாரியத்தின் பறக்கும் படை அதிகாரிகள், திடீரென்று அக்கோவிலில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கோவிலில் இருந்து, முறைகேடாக மின்சாரம் எடுத்து, அப்பகுதியில் இருந்த 2 கடைகளுக்கு பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மின்வாரியத்தின் பறக்கும் படை அதிகாரிகளுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார், இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். அதன்பின், ரூ.1,588 அபராதம் விதித்த, பறக்கும் படை அதிகாரிகள், மின் இணைப்பையும் துண்டித்தனர்.