புழல்: புழல் காந்தி 3வது தெருவைச் சேர்ந்தவர் குமணன்(27.) திமுக பிரமுகரான இவர் சட்டம் படித்து வருகிறார். இவர் கடந்த 17ம் தேதி இரவு, காந்தி பிரதான சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, முன் விரோத தகராறு காரணமாக அவரை கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில், படுகாயம் அடைந்த அவர், ரத்தவெள்ளத்தில் அங்கேயே சரிந்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். இதைப் பார்த்த மர்ம கும்பல், அங்கிருந்து தப்பியோடியது. இதனையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த அவரை, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அன்றிரவே செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்ற, மர்ம கும்பல், அங்கிருந்த சுரேஷ்ராஜன்(60), சிரஞ்சீவி(19) ஆகியோரை தாக்கிவிட்டு, ரூ.10,000த்தை பறித்து சென்றது. இந்த 2 சம்பவம் குறித்து புழல் மற்றும் செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் இந்த 2 வழக்குகளிலும் சம்பந்தமுடைய பம்மதுகுளம் கோணிமேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்கிற யூடியூப் கார்த்திக்(27), சென்னை வியாசர்பாடி பி.வி காலனி 2-வது தெருவைச் சேர்ந்த நாகராஜ்(20), புழல் சக்திவேல் நகர் 2-வது தெருவைச் சார்ந்த டில்லிபாபு(23), புழல் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த விக்னேஷ்(21), புழல் மதுரா மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இலட்சுமணன்(21), நேதாஜி(23), புழல் அம்பேத்கார் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்த அபினேஷ்(20) மற்றும் புழல் திருவீதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த 17வயது சிறுவன் ஆகியோரை புழல் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து மூன்று பட்டாகத்திகள், ஒரு கையெறி குண்டு, 3 மோட்டார் சைக்கிள்கள் ஒரு ஆட்டோ மற்றும் பெட்ரோல் பங்கில் கொள்ளையடித்துச் சென்ற ரூ.2500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், ஏழு பேரையும் மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பொன்னேரி கிளைச்சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். இந்த 2 வழக்குகளிலும் தலைமறைவான மணி, ஆகாஷ், ஜோஸ்வா, வின்சன்ட், உதயா ஆகிய 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்….