முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் விசாரணைக்கு பிறகு முதல் தகவல் அறிக்கை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை:  டெண்டர் முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகார் குறித்து விசாரணைக்குப்பிறகு முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் மாநகராட்சிகளின் மூத்த அதிகாரிகளுக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 220 டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்துள்ளது. விசாரணை அறிக்கையில், எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று முதலமைச்சர், அமைச்சரவை, தலைமை செயலாளருக்கு அறிக்கை அனுப்ப்பட்டது. அதை அவர்கள் ஏற்றுகொண்டதால் வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று அப்போதைய அதிமுக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதற்கு மனுதாரர் தரப்பில், ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்தாலும் அமைச்சருக்கு நற்சான்று அளிக்கப்படவில்லை. இந்த வழக்கை நேரடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வக்கீல் சுரேஷ், இந்த வழக்கில் நிறைய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் நேரடி விசாரணை மேற்கொள்ளவேண்டும். தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும் எனவே சூழலும் மாறிவிட்டது. எனவே வழக்கு விசாரணை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரினார். எஸ்.பி.வேலுமணி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, ஏற்கனவே சிறப்பு அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தியதில் எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று தெரியவந்துள்ளது. விசாரணை அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தெரிவித்தார். அப்போது, அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ள டெண்டர்களில் முறைகேடு நடந்துள்ளதாக கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பான வழக்கை முடித்துவைத்த அரசின் முடிவு மறு ஆய்வுக்கு உள்படுத்தப்படவுள்ளது. விசாரணைக்கு பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்றார். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்