சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு இருப்பதாக ஐகோர்ட்டில் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி வரை பண மோசடி செய்ததாக புகார் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி பலருக்கு ஆவினில் வேலை வாங்கித் தருவதாக விருதுநகர் சேர்ந்த விஜயநல்லதம்பியிடம் கூறியதாகவும், அதனால் பலரிடம் பணம் வாங்கி ராஜேந்திரபாலாஜியிடம் கொடுத்ததாகவும் விஜயநல்லதம்பி கூறினார். நான் கொடுத்த 3 கோடியை ராஜேந்திர பாலாஜி திரும்பி தரவில்லை என விஜய நல்லதம்பி புகார் அளித்தார். இந்த புகார் அடைப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர், ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸ் கைது செய்துவிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பதிலளித்த காவல்துறை, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வேலைக்கு பணம் வாங்கியது மட்டுமல்லாமல், கொலை முயற்சி குற்றச்சாட்டும் உள்ளதாக பதில் அளித்தது. பின்னர், ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கைது நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்றும் ஜாமீன் மனு மீதான விசாரணை 24-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்….