உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு பேசுகையில், மழைக்கால கூட்டத்தொடரில் எந்த விஷயங்களும் பேசுவதற்கு அனுமதிப்பது இல்லை, தினசரி ஒத்தி வைப்பதற்கு ஒன்றிய அரசே காரணம். 27 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு பாஜ தான் காரணம் என விளம்பரங்கள் செய்து வருகின்றனர். இதற்கு முழு காரணமும் திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளின் போராட்டங்களும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுமே காரணம். மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு மிகப்பெரிய போராட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகள் நடைபெறும். கர்நாடக முதல்வர் மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன் என்கிறார். தமிழகத்தில் உள்ள பாஜ தலைவர் 10 ஆயிரம் பேரை திரட்டி உண்ணாவிரதம் இருப்பேன் என கூறுகிறார். பாஜவின் இரட்டை வேடம் மக்களுக்கு நன்றாக தெரியும், மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்….