புதுக்கோட்டை, நவ.28: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 355 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் மெர்சி ரம்யா அறிவுறுத்தி உள்ளார். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கூறும்போது, பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 355 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அரிமளம் வட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அவரது வாரிசுதாரரும் மனைவியுமான பொன்னழகு என்பவரிடம் ரூ.1 லட்சம் நிதியுதவி தொகைக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது என்றார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செய்யது முகம்மது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்அமீர் பாஷா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.