சென்னை: சமய ஆதீனங்கள் மற்றும் பெரியவர்கள் யாரும் இந்து அறநிலையத்துறையை குறைகூறக் கூடாது என மயிலம் ஆதீனம் கேட்டுக்கொண்டுள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞரின் 99-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளிவளாகத்தில் சமத்துவ அரங்கம் என்கிற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மயிலம் ஆதீனம், சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசினார். அப்போது எந்த பிரச்சனையாக இருந்தாலும் சமய ஆதீனங்கள் மற்றும் பெரியவர்கள் தங்களது பிரச்சனைகளை அரசிடம் எடுத்துக் கூறி பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய சிறுபான்மையின நல ஆணையத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பாஜக தலைவர் அண்ணாமலை முன் வைக்கும் குற்றசாட்டுகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் நடைபெற்றது என்றார். தமிழக முதலமைச்சரின் பெருமையை அழிப்பதற்காக பாஜகவினர் கூறிவரும் குற்றச்சாட்டுகளை திமுகவினர் கலைஞர் வழியில் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இஸ்லாமியர்களுக்கு 3.5% இடஒதுக்கீட்டை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் உருவாக்கியதால் தான் என்னால் வழக்கறிஞராகவும், நீதியரசாகவும் பணியாற்ற முடிந்தது என்று முன்னாள் நீதியரசர் அக்பர் அலி குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். …