கடையம்: தமிழக முதல்வரின் தனிப்பிரிவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ரயில்வே ஊழியரை போலீசார் கைது செய்தனர். தமிழக முதல்வரின் தனிப்பிரிவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் போனில் பேசிய மர்ம நபர், சொத்து பிரச்னையில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே தாட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் (34) என்பது தெரியவந்தது. இவர் நெல்லை மாவட்டம் அம்பை ரயில் நிலையத்தில் டிராக்மேனாக பணிபுரிந்து வருகிறார். இவரின் தந்தை ஜெபஸ்டியான் 2 மாதங்களுக்கு முன்பு இடப்பிரச்னை தொடர்பாக ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்ததாகவும், ஆனால் மனு மீது போலீசார் உரிய விசாரணை மேற்கொள்ளாததால் விரக்தி அடைந்து முதல்வர் தனிப்பிரிவுக்கு அந்தோணிராஜ் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்தோணிராஜை ஆழ்வார்குறிச்சி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்தோணிராஜை சென்னை போலீசார் அழைத்துச் சென்றனர்….