ஈரோடு, ஜூன் 23: ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் 33 பேசிக் லைப் சப்போர்ட், 8 அட்வான்ஸ் லைப் சப்போர்ட், 2 பச்சிளம் குழந்தைகள் ஆம்புலன்ஸ், 1 பைக் ஆம்புலன்ஸ் என 44 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், அவசரகால மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த ஆம்புலன்சுகள் மூலம் விபத்து, வலிப்பு, நெஞ்சுவலி, விஷமுறிவு மற்றும் பல்வேறு விதமான நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். குறிப்பாக, கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பிரசவம் பார்த்து, தாயையும் சேயையும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். இந்நிலையில், 108 ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை அளித்து சிறப்பாக செயல்பட்ட அவசரகால மருத்துவ உதவியாளர் மகாதேவன், ஓட்டுநர் சனாவுல்லா ஆகியோருக்கு ஈரோடு தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனையின் உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் சசிரேகா பாராட்டி பரிசு வழங்கி கவுரவித்தார்.