ரெட்டியார்சத்திரம், மே 31: ரெட்டியார்சத்திரத்தில் முட்புதரில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை போலீசார் மீட்டனர். குழந்தையை வீசி சென்ற நபர் குறித்து விசாரித்து வருகின்றனர். ரெட்டியார்சத்திரம், தோப்புப்பட்டி காலனி அருகே முட்புதரில் நேற்று முன்தினம் ஆண் குழந்தை சடலம் கிடந்தது. அந்தப் பகுதியில் ஆடு மேய்த்தவர்கள் சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து, ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் அங்கு வந்து குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்டது 7 மாத குழந்தையின் சடலம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை முட்புதரில் வீசி சென்றது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.