பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சியில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளி கடைபிடிக்காமலும் இருந்த திருமண வீட்டாரிடம் சுகாதார ஆய்வாளர் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூல் செய்தார். தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை அமலில் உள்ளது. மேலும், கோயில் நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது, திருமண நிகழ்ச்சியில் 50 பேர் மட்டும் கலந்து கொள்ளலாம் உள்ளிட்ட விதிகளையும் அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நேற்று தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பலர் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் ஊழியர்கள் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, பலரும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது தெரிய வந்தது. மேலும், அதிகாரிகள் அங்கு வருவதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவசர அவசரமாக முகக்கவசத்தை எடுத்து அணிந்து கொண்டனர். இதையடுத்து, அரசின் விதிமீறல்களை மீறியதாக திருமண வீட்டாருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முககவசம் அணியாமல் வருபவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள், அரசு அறிவித்துள்ள விதிகளை மீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் பணி தொடர்ந்து நடைபெறும் என சுகாதார ஆய்வாளர் எச்சரித்துள்ளார்….
முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்காத திருமண வீட்டாருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
previous post