ஜெயங்கொண்டம், செப்.20: மீன்சுருட்டி அருகே உள்ள அரசு புறம்போக்கு குளத்தை அடைத்து வைத்து கம்பிவேலி விடுவதாக கிடைத்த தகவல் பேரில் அந்தப் பகுதியை சேர் ந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் முத்துசேர்வாமடம் ஊராட்சியில் உள்ள செல்லிக்குட்டை குளத்தை தனி நபர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைப்பதாக கிடைத்த தகவல் பேரில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கம்பி வேலி அமைக்க கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு புறம்போக்கு குளம் சுமார் இரண்டு ஏக்கருக்கு மேல் உள்ளது.
இந்த குளத்தில் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கூறினார்கள்.இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் பாரதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி செல்லிக்குட்டை குளத்தை சுற்றி உள்ள சுமார் இரண்டு ஏக்கருக்கு மேலாக உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மீட்டு தருவதாக கொடுத்த உறுதியின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.