மதுரை, செப். 30: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வழக்கமாக பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இந்நிலையில் தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதால், நேற்று கோயிலில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் அவர்கள் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து அம்மன் மற்றும் சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்கள் கொண்டு வந்த செல்போன் மற்றும் காலணிகளை காப்பகத்தில் வைக்கவே, அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் கோயிலின் உட்பகுதியில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. மேலும் சித்திரை வீதியில் உள்ள நகை, ஜவுளி கடைகளிலும் விடுமுறை தினம் என்பதால் கூட்டம் அலைமோதியது. கோயில் வளாகத்தில் உள்ள பிரசாத ஸ்டால்களில் லட்டு, அப்பம், முருக்கு மற்றும் பொங்கல், புளியோதரை உள்ளிட்டவை அதிகளவில் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.