மாண்டலே: மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஆட்சியை கடந்த பிப்ரவரி முதல் தேதியன்று ராணுவம் கைப்பற்றியது. தலைவர்கள் பலர் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர். ராணுவ நடவடிக்கையை ஏற்காத மக்கள், தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சனிக்கிழமையன்று மாண்டலேவில் நடந்த போராட்டத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேபோல் மியான்மரின் தெற்கு நகரான பியாய் நகரில் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் பலியானார். இதேபோல் நேற்று முன் தினம் நடந்த போராட்டத்தில் யாங்கூனில் 3 பேர் கொல்லப்பட்டனர் என்று சமூக வலைதளங்களில் பலர் செய்திகளைப் பகிர்ந்துள்ளனர். இரவு நேர போராட்டங்களில் காவல்துறையும், ராணுவமும் கடுமையாக மக்களிடம் நடந்துகொள்கின்றன என்று போராட்டக்காரர்கள் சிலர் கூறியுள்ளனர். சிலரை வீடுகளிலிருந்தும் கைது செய்து அழைத்துச் செல்கிறது காவல் துறை. இதுபோல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவர் தெகெட்டா டவுன்ஷிப் பகுதியில் உயிரிழந்ததாகவும் செய்திகள் பரவியுள்ளன. மியான்மருக்கான ஐநா மனித உரிமைகள் ஆணைய அதிகாரி டாம் ஆண்ட்ரூஸ், ‘இதுவரை போராட்டக்காரர்களில் 70 பேர் கொல்லப்பட்டிருக்கலாம்’ என்று கவலை தெரிவித்துள்ளார்….