கோவை, ஜூலை 20: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் கோவையில் பொதுமக்களுக்கு மின்சார வாகனம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மின்சார வாகனங்களை பொதுமக்கள் மத்தியில் பிரபலபடுத்தும் வகையில் இரண்டு நாட்கள் விழிப்புணர்வு வாகனம் மூலம் பிரசாரம் நடத்த மின்வாரியம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி, டாடாபாத் தலைமை பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், தலைமை பொறியாளர்(பொ) சுப்பிரமணியம், கோவை மின்பகிர்மான வட்டம் மாநகர் மேற்பார்வை பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்தனர்.
இந்த வாகனம் கோவை மாநகர வட்டத்திற்கு உட்பட்ட காந்திபுரம், ரேஸ்கோர்ஸ், சிங்காநல்லூர், ஓண்டிப்புதூர், ரத்தினபுரி, கவுண்டபாளையம், பீளமேடு, சங்கனூர், உக்கடம், டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம், ரயில்நிலையம், உப்பிலிபாளையம், புலியகுளம், சாய்பாபா காலனி, கணபதி, தண்ணீர்பந்தல், சுங்கம், இருகூர், சின்னியம்பாளையம், சூலூர் பகுதிகளில் சாலைகளில் பயணித்து பொதுமக்கள் இடையே மின்சார வாகனங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளது.