குடியாத்தம், ஜூன் 22: வாட்டர் ஹீட்டரில் தண்ணீர் காய வைத்தபோது மின்சாரம் தாக்கியதில் 7ம் வகுப்பு மாணவி பரிதாபமாக பலியானார். குடியாத்தம் அடுத்த பரதராமி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கோபி மகள் சஞ்சனா(14). அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று மாலை வீட்டில் உள்ள வாட்டர் ஹீட்டரில் தண்ணீர் காய வைத்துள்ளார். பின்னர், சுவிட்சை நிறுத்தாமல் தண்ணீரில் கை வைத்து பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் காஞ்சனா தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பரதராமி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் காஞ்சனா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.