திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்த மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டு இதில் தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் தாலுகா சப் – இன்ஸ்பெக்டர் கோபி கிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் திருவள்ளூர் – புட்லூர் செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது போலீசார் அந்த வழியாக வந்த ஒரு மினி வேனை நிறுத்துமாறு சைகை காட்டினர்.
அப் போது அந்த மினிவேனை ஒட்டி வந்த டிரைவர் போலீசாரை கண்டதும் சாலை ஓரம் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார். இதனைத் தொடர்ந்து, போலீசார் அந்த மினி வேனை சோதனை செய்தபோது அதில் திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, போலீசார் அந்த மினி வேனை பறிமுதல் செய்தனர். பிறகு மணல் கடத்தலில் ஈடுபட்டு தப்பி ஓடிவிட்ட மினி வேன் டிரைவர் யார் என்றும், எந்த ஊரைச் சேர்ந்தவர் என வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.