மதுரை, டிச. 9: சென்னையில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிப் பொருட்களை வழங்குவதற்கு, மதுரை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள், தனியார் அமைப்புகள், பொதுமக்கள் உதவி செய்ய முன் வந்தனர். அதனடிப்படையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடைகள் (கைலி, நைட்டி, துண்டு), பால் பவுடர், தண்ணீர் பாட்டில், பிஸ்கட், அரிசி உள்ளிட்ட ரூ.55 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிப் பொருட்கள் 10 லாரிகள் மூலம் மதுரை மாவட்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வரும் மதுரை மாவட்ட அதிகாரிகள் உதவியுடன், இங்கிருந்து அனுப்பி வைக்கப்படும் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் சங்கீதா கூறும்போது, ‘‘மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிக்கரம் நீட்டிய அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள், தனியார் அமைப்புகள், பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் நன்றி தெரிவிக்கிறது’’ என்றார்.