சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு பெரிய அளவில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக சென்னை சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது உகாண்டாவில் இருந்து வந்த நபரின் நடவடிக்கை சந்தேகத்தை அளித்தது. அவரை தனியாக அழைத்து சென்று சோதனை செய்ததில் ரூ.8.86 கோடி ஹெராயின் சிக்கியது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்துக்கு வெளிநாட்டில் இருந்து போதை பொருள் பெரிய அளவில் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் சுங்கத்துறையினருக்கு கிடைத்து. இதையடுத்து வெளிநாட்டு பயணிகளை தீவிரமாக கண்காணிக்க துவங்கினர். இந்நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம், அடிஸ் அபாபா நகரில் இருந்து, நேற்று அதிகாலை சென்னை வந்தது. அதில் தான்சானியா நாட்டைச் சேர்ந்த ஜோசப் பேட்டரிக் (37) என்ற பயணி, சுற்றுலாப் பயணிகள் விசாவில் உகாண்டாவில் இருந்து வந்திருந்தார். இவர் மீது, சுங்கஅதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து அவருடைய உடமைகளை முழுமையாக சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல், அந்த பயணியை சென்னை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்தனர். அப்போது அவருடைய வயிற்றுக்குள் போதை பொருள் அடங்கிய கேப்சூல்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக ஜோசப் பேட்ரிக்கை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு இனிமா கொடுத்து, வயிற்றில் உள்ள கேப்சூல்களை வெளியே கொண்டு வந்தனர். அவருடைய வயிற்றிலிருந்து மொத்தம் 86 கேப்சூல்கள் வெளியே வந்தன. அவர் விழுங்கி வந்திருந்த கேப்சூல்களை, சுங்க அதிகாரிகள் உடைத்து பார்த்தபோது, அவைகளில் ஹெராயின் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. 86 கேப்சூல்களிலும் மொத்தம் 1.256 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 8.86 கோடி. தொடர்ந்து, சுங்க அதிகாரிகள் உகாண்டா பயணியை கைது செய்தனர். அவரிடமிருந்து ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். இவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. இவரிடம் போதைப்பொருளை கொடுத்து அனுப்பியது யார். சென்னையில் யாரிடம் கொடுக்க எடுத்து வந்தார் என்று விசாரணை நடக்கிறது. தான்சானியா நாட்டு பயணி ஒருவரிடம் இருந்து ரூ.8.86 கோடி மதிப்புடைய ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….