தஞ்சாவூர், ஜூன் 27: இயற்கை வளம் மனிதவளம் தகவல் தளம் அமைக்க வேண்டும் என்று மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட திட்டக்குழு கூட்டம் 2024-2025ம் ஆண்டிற்கான முதல் கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட ஊராட்சித்தலைவர் உஷா புண்ணியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் முன்னிலை வகித்தார். இதில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், வட்டார ஊராட்சி வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றைத் தொகுத்து மாவட்ட அளவில் மாவட்ட ஊராட்சி வளர்ச்சித் திட்டம் தயாரித்தல் பணியினை மேற்கொள்ளுதல். மாவட்டத்தின் இயற்கை வளம் மற்றும் மனிதவளம் சம்பந்தமான அனைத்து விவரங்களையும் சேகரித்து தொகுத்து தகவல் தளம் அமைத்து பணிசெய்தல், ஊரக மற்றும் நகர்ப்பகுதி உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சார்புத்துறைகள் தயாரித்த பொருளாதார வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை அமல்படுத்த வரைவுத்திட்டங்கள் தயாரித்தல் மற்றும் அவை பற்றி விவாதித்து ஒருங்கிணைந்த அடிப்படை வசதி வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலை பேணிக்காக்க உதவுதல்,
மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்கள் உட்பட செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் பணிகளின் செயலாக்கதையும் கண்காணித்து ஆய்வு செய்தல் போன்ற செயல்கள் மாவட்ட திட்டக்குழுவின் செயலாக்கம் குறித்தும், முன்னதாக நடைபெற்ற மாவட்ட திட்டக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருள்களின் விவரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், புதிதாக பெறப்பட்ட கோரிக்கைகளை விரைவில் தீர்வு காணும்படி சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட திட்டக் குழுத் தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி தெரிவித்தார். இதில் உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், மாவட்ட திட்டமிடல் அலுவலர் மற்றும் ஊராட்சி செயலர் பாரதிதாசன், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.