தேன்கனிக்கோட்டை: மாவட்ட அளவில் நடந்த கட்டுரைப்போட்டியில், முதல் பரிசுபெற்ற அஞ்செட்டி அரசுப்பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது. கிருஷ்ணகிரி ஆடவர் கலைக்கல்லூரியில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், கடந்த 28ம் தேதி மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை, பேச்சு மற்றும் கவிதைப்போட்டிகளில், அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்2 மாணவ, மாணவிகள் 3 பேர் கலந்து கொண்டனர். கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்ட மாணவி சரண்யா, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து ₹10 ஆயிரம் காசோலை மற்றும் சான்றிதழ் பெற்று பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தார்.
பரிசு பெற்ற மாணவியை பாராட்டி, நேற்று அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளியின் (பொ) தலைமை ஆசிரியர் கணேஷ்மூர்த்தி, மாணவிக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கினார். மேலும் கவிதைப்போட்டியில் பங்கெடுத்த மாணவி நிவேதா மற்றும் பேச்சுப்போட்டியில் பங்கெடுத்த மாணவன் சஞ்சீவ்மூர்த்தி ஆகியோரை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவியை ஊக்கப்படுத்திய முதுகலை தமிழ் ஆசிரியர் வேணுகோபாலுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர் முனிராஜ், முன்னாள் மாணவர் மன்ற தலைவர் வெங்கடராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.