Wednesday, July 3, 2024
Home » மாவட்டத்தில் 9.12 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் காஸ்-சிலிண்டர் சப்ளை படிப்படியாக நிறுத்தம்

மாவட்டத்தில் 9.12 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் காஸ்-சிலிண்டர் சப்ளை படிப்படியாக நிறுத்தம்

by kannappan

கோவை : ஒன்றிய அரசின் பல்வேறு எண்ணெய் நிறுவனங்கள் மூலமாக எல்பிஜி சமையல் காஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாக கோவை மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் மீத்தேன் சமையல் கேஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள 9.12 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் மீத்தேன் சமையல் காஸ் வழங்கப்படவுள்ளது. இதற்காக, மாவட்டம் முழுவதும் 230 கி.மீ., தூரத்திற்கு பெரிய இரும்பு குழாய்களும், 14 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலி எத்தீலின் குழாய்களும் பதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை, சுமார் 80 கி.மீ தூரம் பெரிய குழாய்கள் பாதிக்கப்பட்டன. கேரள மாநிலம் கொச்சிக்கு வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில் திரவ நிலையில் அழுத்தப்பட்ட மீத்தேன் கேஸ் (சிஎன்ஜி.) கொண்டு வரப்படுகிறது. இந்த கேஸ் பெங்களூருவுக்கு குழாய் மூலம் சப்ளையாகிறது. கேரள மாநிலம் கூட்டாடு பகுதியில் இருந்து கோவைக்கு இரும்பு குழாய்கள் மூலம் மீத்தேன் கேஸ் சப்ளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மீத்தேன் கேஸ் பாதுகாப்பானது. இதில், தீ விபத்து அபாயம் வெகுவாக தவிர்க்க முடியும். முதல் கட்டமாக கோவை மாவட்டத்தில் பிச்சனூர், வீரப்பனூர் பகுதியில் வழங்கப்படும். பின்னர், கோவையின் அனைத்து பகுதிகளுக்கும் குழாய் பதித்து வினியோகம் செய்யப்படும். கோவை மாநகர் மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள சிறு கிராமங்களுக்கு கூட இந்த மீத்தேன் சமையல் காஸ் குழாய் மூலம் வினியோகம் செய்ய முடியும். இதற்கான பணிகள் கடந்த 2019ம் ஆண்டு துவங்கியது. கொரோனா நோய் பரவல் நிலையில் பணிகள் தாமதமானது. இப்போது பணிகள் வேகமாக நடக்கிறது. வரும் 2029ம் ஆண்டிற்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிந்து விடும். பைப் லைன் கேஸ் வந்தால் இனி சிலிண்டர்களுக்கு தேவை இருக்காது.மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வீதிகளிலும் பள்ளம் தோண்டி குழாய் பாதிக்க வேண்டியிருக்கிறது. பல இடங்களில் கேபிள், மின் ஒயர், தொலைபேசி ஒயர்கள், இதர பைப்கள் செல்வதால் பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. நிலத்தடியில் மட்டுமே இந்த குழாய்களை பதிக்க முடியும். நிலத்திற்கு மேலே இந்த குழாய்களை கொண்டு செல்ல அனுமதி கிடையாது. குழாய்கள் நேரடியாக வீட்டின் சமையல் அறைக்கே குடிநீர் குழாய் இணைப்பு போல் வழங்கப்படும். சமையல் அறை பகுதியில் மீட்டர் பொருத்தப்பட்டு கேஸ் பயன்பாடு கணக்கிடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும். கோவை மாநகரில் மட்டும் 6 லட்சம் வீடுகள் இருப்பதாக தெரிகிறது.  மாவட்டம் முழுவதும் 9.12 லட்சம் வீடுகளுக்கு இந்த காஸ் இணைப்பு கொடுக்கப்படவுள்ளது. மாநில எல்லையோர பகுதியை தொடர்ந்து மதுக்கரை, எட்டிமடை, குறிச்சி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காஸ் இணைப்பு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே டில்லி, குஜராத், மும்பை உள்ளிட்ட பகுதியில் வீடுகளுக்கு மீத்தேன் சமையல் காஸ் சப்ளை செய்யும் பணிகள் நடக்கிறது. கோவை மாவட்டத்தில் முதல் முறையாக இந்த கேஸ் சப்ளை வரும் டிசம்பரில் துவக்கப்படும் என கோவை ஐ.ஓ.சி.எல் மேலாளர் சுரேஷ் தெரிவித்தார்.  இது கோவை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மீத்தேன் காஸ் ஆல் செலவு குறையும்மீத்தேன் கேஸ் மிகவும் எடை குறைந்தது. குழாய்களில் ஏதேனும் கசிவு ஏற்பட்டாலும் காற்றின் கீழ் பகுதியில் கேஸ் தங்காது. இதனால், தீ விபத்து ஏற்படாது. காஸ் உடனடியாக மேல் நோக்கி சென்று விடும். எடை குறைவான கேஸ் ஆக இருப்பதாக சமையல் அறையில் கேஸ் கசிந்தாலும் பாதிப்பு இருக்காது. கேஸ் மூலமாக தீ பரவும் வாய்ப்பு மிகவும் குறைவு. எல்ஜிபி கேசை காட்டிலும் இதன் விலை 10 முதல் 20 சதவீதம் வரை குறைவாக இருக்கும் என தெரிகிறது. பயன்பாட்டிற்கு ஏற்ப காஸ் கட்டணம் வசூலிக்கப்படும். தொடர்ந்து கேஸ் சப்ளை நடக்கும் நிலையிருப்பதால் காஸ் தீர்ந்து விட்டது. புக்கிங் செய்ய வேண்டும் என மக்கள் பரிதவிக்க வேண்டிய நிலையிருக்காது….

You may also like

Leave a Comment

three × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi