திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மிதமான மழை காரணமாக விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் மாதம் 20ம் தேதிக்கு மேல் துவங்கி டிசம்பர் மாதம் இறுதி வரையில் பெய்வது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டில் இந்த வடகிழக்கு பருவமறையானது, தற்போது துவங்கியுள்ளதையடுத்து மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக திருவாரூர் நகரில் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. மேலும் மாவட்டத்தில் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன் சாகுபடி பணிகளையொட்டி களை எடுப்பது, பூச்சி மருந்து தெளித்தல், அடி உரமிடுவது போன்ற பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.