விருதுநகர், ஜூன் 1: சிறப்பாக செயல்படும் அரசுப்பள்ளிகளையும் மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் காமராஜர் விருது வழங்கி ஆண்டுதோறும் சிறப்பிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து குழுக்கள் அமைத்து 4 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயசீலன், காமராஜர் விருது வழங்கும் நிகழ்வில் கிழவிகுளம் ஊராட்சி துவக்கப் பள்ளிக்கு ரூ.25 ஆயிரம், மானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம், மம்சாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75 ஆயிரம், சூலக்கரை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். கலெக்டர் கூறுகையில், வரும் கல்வியாண்டில் மாவட்டத்தின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டுமென தலைமையாசிரியர்களிடம் தெரிவித்தார். நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி, இடைநிலை மாவட்ட கல்வி அலுவலர் இந்திரா மற்றும் பலர் பங்கேற்றனர்.