மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் 2,213 புதிய பஸ்களை கொள்முதல் செய்யலாம்: அரசுக்கு ஐகோர்ட் அனுமதி

சென்னை: மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் 2,213 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய அரசுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பஸ்களை கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2016ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யக்கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில், தமிழக போக்குவரத்து துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பாக சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் அடங்கிய தொழில்நுட்பக் குழு அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2,213 புதிய பேருந்துகளை வாங்க அரசு முடிவு செய்துள்ளது.தற்போது, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 642 பேருந்துகள் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 242 பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் தாழ்தள பேருந்துகளாக கொள்முதல் செய்யப்பட உள்ளன. இது மொத்த கொள்முதலில் 37 சதவீதமாகும். தொழில்நுட்ப குழு பரிந்துரைப்படி சென்னையில் உள்ள 956 பேருந்து நிறுத்தங்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக மாற்றியமைக்கப்பட வேண்டியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான பேருந்துகள் கொள்முதல் செய்வது தொடர்பான டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது. ஆறு மாதங்களில் பேருந்துகள் முழுமையாக கொள்முதல் செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக நிதி நெருக்கடி உள்ள போதும், இந்த பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இந்த டெண்டர் நடவடிக்கைகளை தொடங்க அனுமதியளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை பின்பற்றியே பேருந்துகள் கொள்முதல் செய்ய வேண்டும். இந்த சட்ட விதிகளையும், உச்ச நீதிமன்ற உத்தரவையும் பின்பற்றி 2,213 புதிய பேருந்துகளையும், 500 மின்கல பேருந்துகளையும் போக்குவரத்து கழகங்கள் கொள்முதல் செய்யலாம் என்று உத்தரவிட்டனர்….

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்