மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

தஞ்சாவூர், ஜூலை 5: மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். தமிழக அரசால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு தஞ்சாவூர் பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய 3 கோட்ட அளவில் நடைபெறவுள்ளது. 9ம் தேதி தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், 16ம் தேதி கேஎம்எஸ்எஸ் வளாகம் பேருந்து நிலையம் அருகில் கும்பகோணத்தில், 23ம் தேதி கிராம சேவை கட்டிடம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் பட்டுக்கோட்டையில் நடைபெறுகிறது.

இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர், மன நல மருத்துவர் மற்றும் கண் மருத்துவர் ஆகிய பல்வேறு அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளனர். மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுநாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படங்களுடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம். இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு (UDID) விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை