மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கை எதிர்த்து திமுக வழக்கு: ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதி வழங்கும் சட்டப்பிரிவுகளை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதி வழங்கும் சட்டப்பிரிவுகளை எதிர்த்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது.திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிப்பது, தேர்தலில் ரகசியத்தை பாதிக்கும். அரசியல் சாசனத்தின்படி, தேர்தல் வாக்களிப்பில் அனைவரையும் சமமாக கருத வேண்டும். எந்த பாரபட்சமும் காட்டக் கூடாது. மாற்றுத்திறனாளிகள் குறித்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. வாக்காளர் யார் என்பதை வாக்குச்சாவடிக்கு செல்லும்போதுதான் அடையாளம் காண முடியும். முதியோருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்று வாதிட்டார். தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன், தவறான யூகத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது வழங்க உள்ள தபால் வாக்கு என்பது விருப்ப தேர்வு தான் என்று கூறினார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் வாதிடும்போது, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதித்தவர்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதி வழங்குவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. இது சம்பந்தமாக மத்திய அரசுடன் கலந்தாலோசித்தாலே போதுமானது. மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க அவசியமில்லை என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை