மார்த்தாண்டம், ஆக.29 : மார்த்தாண்டம் நகர வர்த்தக சங்கம் சார்பில், நகர வர்த்தக சங்க உறுப்பினர்களாக உள்ள உணவு சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு, முகாம் மூலம் உணவு பாதுகாப்புத்துறை பதிவு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வர்த்தக சங்க அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மார்த்தாண்டம் நகர வர்த்தக சங்க தலைவர் தினகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செல்வராஜ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் நீலகண்டன், தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவையின் குமரி மேற்கு மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் ஜஸ்டஸ் அமிர்தயன் பத்மசீலன், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர வர்த்தக சங்க செயற்குழு உறுப்பினர் லெனின் வரவேற்றார்.
குழித்துறை நகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கிளாட்ஸன் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு பதிவு செய்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில துணைத்தலைவர் கருங்கல் ஜார்ஜ், மார்த்தாண்டம் வர்த்தக சங்க துணை செயலாளர் ஆனந்த், செயற்குழு உறுப்பினர் ராஜன் ஆகியோர் பங்கேற்று பேசினர். குழித்துறை நகராட்சி தலைவரும், தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவையின் குமரி மேற்கு மாவட்ட தலைவருமான பொன் ஆசைத்தம்பி உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்த வணிகர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்றனர். மார்த்தாண்டம் நகர வர்த்தகர் சங்க பொருளாளர் ஜெயசிங் நன்றி கூறினார். கூட்டத்தில் சதீஷ்குமார், ஜாண், வினோஜ், ராஜ்பினோ, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.