பொள்ளாச்சி : பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தற்போது மாம்பழம் வரத்து துவங்கினாலும், விற்பனை மந்தமாக உள்ளதால் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சியில் காந்தி மார்க்கெட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாம்பழம், தர்பூசணி, பலாபழம், அண்ணாசி பழம் மற்றும் கரும்பு உள்ளிட்டவை சீசனை பொறுத்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த வருடம் துவக்கத்தில் இருந்து தர்பூசணி வரத்து அதிகமாக காணப்பட்டது. வெளி மாவட்டங்களில் இருந்து லாரி மற்றும் டெம்போக்களில் கொண்டு வரப்படும் தர்பூசணிகளை வியாபாரிகள் மொத்த விலைக்கு வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், மார்க்கெட்டுக்கு மாம்பழம் வரத்தும் தற்போது துவங்கியுள்ளது. இந்த சீசன் தொடர்ந்து ஜூன் மாதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளான ஆனைமலை, கோட்டூர், அம்பராம்பாளையம், ஆழியார், வேட்டைகாரன்புதூர், உடுமலை, கனியூர் மற்றும் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை பகுதியில் இருந்து மாம்பழங்கள் அதிகளவில் கொண்டு வரப்படுகின்றன. ஆனால், தற்போது மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்ட அனைத்து வகையான மாம்பழங்களின் பருமன் சிறிய அளவிலேயே இருப்பதை காண முடிகிறது. இதனால், மாம்பழங்களின் விற்பனை மந்தமாகி, மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்க வரும் வியாபாரிகள் அதனை குறைந்த விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்வதை தொடர்ந்துள்ளனர். இன்னும் சில வாரத்தில் சித்திரை விசு நெருங்கும் வேளையில், வெளியூர்களிலிருந்து மாம்பழங்களின் வரத்து அதிகமாக இருக்கும் என்பதால், அந்நேரத்தில் விற்பனை விறுவிறுப்பாக இருக்கும் என மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்….