ஈரோடு, மார்ச் 31: அந்தியூர் அடுத்துள்ள அத்தாணி குப்பக்கவுண்டன்பாளையம், மாரியம்மன்கோயில் வீதியை சேர்ந்தவர் பெருங்காயம்மாள்(76). இவருக்கு கடந்த சில மாதங்களாக புத்தி சுவாதீனம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி மாயமானார். இதையடுத்து குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இந்நிலையில், அத்தாணி கைகாட்டி ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் பெருங்காயம்மாள் சடலமாக கிடப்பதாக குடும்பத்தினர்க்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இது குறித்து ஆப்பக்கூடல் போலீசில் புகார் செய்ததையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.