திருமுருகன்பூண்டி : திருமுருகன்பூண்டி அருகே மாமியார் விவாகரத்து செய்ய சொன்னதால் மனைவியை அடித்து கொன்றேன் என்று கணவன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையை சேர்ந்தவர் கண்ணையன். இவரது மனைவி மணிமுத்து. இவர்களது மகள் வைஷ்ணவி (19). இவர் தவிர இன்னும் 3 மகள்கள் உள்ளனர். கண்ணையன் நாட்டரசன்கோட்டையில் வசிக்கிறார். மணிமுத்து தனது 4 மகள்களுடன் திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வைஷ்ணவி அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது அதே நிறுவனத்தில் பணியாற்றிய தேனி மாவட்டம் போடியை சேர்ந்த அருண்குமார் (23) என்பவரை காதலித்தார். கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. தகராறு வரும் தருணங்களில் வைஷ்ணவியை அவருடைய தாயின் வீட்டில் விட்டுவிட்டு அருண்குமார் தனது சொந்த ஊரான போடிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த மாதம் தகராறு ஏற்பட்டபோது அருண்குமார் போடிக்கு சென்றுவிட்டார். கடந்த வாரம் அருண்குமார் மீண்டும் போயம்பாளையம் வந்தார். அப்போது மணிமுத்துவிடம், பாண்டியன் நகர் பகுதியில் உள்ள பண்ணாரியம்மன் நகரில் வீடு வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், அங்கு மனைவியுடன் வசிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு வைஷ்ணவியுடன் ஒரு வாரமாக வசித்து வந்தார். கடந்த 4ம் தேதி காலை அருண்குமார் பைக்கில் மனைவியுடன் வெளியில் சென்னர். பின்னர் இருவரும் வீடு திரும்பினர். சிறிது நேரத்தில் அருண்குமார் மட்டும் வீட்டின் கதவை மூடிவிட்டு பைக்கில் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த நிலையில் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாதது அந்த பகுதியினரை சந்தேகப்பட வைத்தது. வைஷ்ணவியின் செருப்பு மட்டும் வெளியில் கிடந்தது. எனவே அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்தனர். அப்போது வைஷ்ணவி கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. பெல்ட்டால் வைஷ்ணவியின் கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர்கள் திருமுருகன் பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தப்பியோடிய அருண்குமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் அருண்குமார் கூத்தம்பாளையம் பகுதியில் அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அருண்குமாரை மடக்கி பிடித்து கைது செய்தனர். போலீசாரிடம் அருண்குமார் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: நான் வைஷ்ணவியை திருமணம் செய்தது அவரது தாயார் மணிமுத்துவுக்கு பிடிக்கவில்லை. பொருளாதாரத்தில் நான் பின் தங்கி இருப்பதாக கூறி என்னை மட்டம் தட்டி வந்தார். அவரது வீட்டிலேயே எனது மனைவி வசிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். மேலும் என்னை விவாகரத்து செய்துவிடலாம் என்று மணிமுத்து கூறினார்.
அங்கும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை பெல்ட்டால் இறுக்கி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றேன். இவ்வாறு அவர் கூறினார்….