Sunday, June 30, 2024
Home » மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்க உள்ள நிலையில் பொதுமக்கள் பயணம் செய்வதை தவிர்க்கலாம்: காய்கறி, பால் முன்கூட்டியே வாங்கி வைக்கவும்; தமிழக அரசு வேண்டுகோள்

மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்க உள்ள நிலையில் பொதுமக்கள் பயணம் செய்வதை தவிர்க்கலாம்: காய்கறி, பால் முன்கூட்டியே வாங்கி வைக்கவும்; தமிழக அரசு வேண்டுகோள்

by kannappan

சென்னை: மாண்டஸ் புயல் இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்க உள்ள நிலையில், பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோன்று, பொதுமக்கள் காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும், கடற்கரைக்கு செல்வதை தவிர்க்கவும், பலத்த காற்று வீசும்போது மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையம், கடந்த 8ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது ‘மாண்டஸ்’ புயலாக வலுவடைந்துள்ளது. இது தென்கிழக்கு சென்னையில் இருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது என்றும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னை, மாமல்லபுரம் அருகே இன்று (9ம் தேதி) இரவு கரையை கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 08-12-2022 முதல் 11-12-2022 முடிய 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் எனறும், கடலோர பகுதிகளில் மணிக்கு 70 முதல் 85 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று மற்றும் தரைக்காற்று வீசக்கூடும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையத்தால் எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், புயல் மற்றும் கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளின் தயார் நிலை குறித்து துறை உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில், நீர்வள ஆதாரத் துறை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உள்துறை செயலாளர், எரிசக்தி துறை, வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர்கள் மற்றும் காவல் தலைமை இயக்குநர், சென்னை நகர காவல் துறை ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், பேரிடர் மேலாண்மை, இயக்குநர், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூடுதல் இயக்குநர், கடலோர காவல்படையின் உயர் அதிகாரிகள்  கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:* தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 396 வீரர்கள் அடங்கிய 12 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன.* கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் தொடர்புடைய மாவட்ட கலெக்டர்கள் வருவாய் நிர்வாக ஆணையர் கடந்த 7ம் தேதி அனுப்பிய கடிதத்தின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.* கடலோர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 424 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொடர்ந்து புயல்  குறித்த அறிவிப்புகளை வழங்க வேண்டும்.* வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தை தொடர்ந்து பொதுமக்களுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் குறுஞ்செய்திகள் வாயிலாக எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ள நிலையில் இதனை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.* முன்னெச்சரிக்கை செய்திகள் TNSMART செயலி மூலமாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.  * பேரிடரின்போது காவல்துறை மூலமாக போக்குவரத்தை சீரமைக்க போதுமான காவலர்களை ஈடுபடுத்த வேண்டும்.* பாதிப்பிற்குள்ளாகக்கூடிய இடங்களில் முன்கூட்டியே தேவையான படகுகள், உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும்.* மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். * பாதிப்பிற்குள்ளாகும் / தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். தங்குதடையின்றி குடிநீர் வழங்குவதற்கு போதுமான ஜெனரேட்டர்கள் வைத்திருக்க வேண்டும்.* பால் மற்றும் பால்பவுடர் விநியோகம் தடையில்லாமல் நடைபெற உரிய ஏற்பாடுகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும். பேரிடர் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களுக்கும், நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் சீரான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.* பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.* நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கும், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் உணவு அளிக்கும் வகையில் சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.* அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உபரி நீர் வெளியேற்றும்போது பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும்.* நெடுஞ்சாலை, நீர் வள ஆதாரத்துறை, மின் வாரியம், தீயணைப்பு மீட்பு பணிகள் துறை உள்ளிட்ட துறைகள் களப்பணியாற்ற தயார் நிலையில் இருக்க வேண்டும்.* இரவு (9ம் தேதி) மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில், பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்.  * பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதை தவிர்க்கவும்.* இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (முகநூல், டுவிட்டர்), TNSMART செயலி மூலம் பகிரப்படும் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.* மெழுகுவர்த்தி, டார்ச் லைட், தீப்பெட்டி, பேட்டரி, மருத்துவ கட்டு, உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.* புயல் மற்றும் கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிருவாகங்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

five × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi