மாமல்லபுரத்தில் கடல் அலை சீற்றம் அதிகரித்து 7 அடி உயரத்துக்கு மண் அரிப்பு: மீனவர்கள் அச்சம்

மாமல்லபுரம், ஜூலை 4: மாமல்லபுரத்தில் கடல் அலை சீற்றம் அதிகரித்ததால் 7 அடி உயரத்திற்கு மணல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் அச்சமடைந்தனர். மாமல்லபுரம் முதல் புதிய கல்பாக்கம் கடற்கரை பகுதி வரை மீனவ குப்பங்களில் 2500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, மீன்பிடி தொழில் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இப்பகுதி, மீனவர்கள் தினமும் கடலில் குறிப்பிட்ட தூரம் சிறிய படகுகளில் சென்று மீன் பிடித்து வந்து விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை முதலே மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளில் கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. கடல் அலையானது சில அடி உயரத்துக்கு எழும்பி கரையை நோக்கி வேகமாக வந்தது.

இதனால், கரை பகுதியை தாண்டி பல மீட்டர் தூரத்துக்கு கடல் முன்னோக்கி வந்து, அங்குள்ள கடற்கரை உணவகங்களை அலைகள் வேகமாக தாக்கியது. மேலும், கடற்கரையில் சில அடி உயரத்துக்கு கடல் அலைகளின் சீற்றம் காரணமாக 7 அடி உயரத்துக்கு மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால், மீனவ மக்கள் அச்சமடைந்தனர். மீன்பிடி படகு மற்றும் வலைகளை பாதுகாப்பாக வைத்துள்ளனர். கொக்கிலமேடு மீனவர் பகுதியில் இருந்து கோவளம் கடற்கரை பகுதி வரை கடல் ஆக்ரோஷமாக காணப்படுவதால் மீனவர்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். இதனால், கடற்கரை பகுதியில் பரபரப்பு நிலவியது. மாமல்லபுரத்தை பொறுத்த வரை காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை