பழநி, டிச. 25: பழநி அருகே தொப்பம்பட்டி பகுதியில் மானிய விலையில் சூரியகாந்தி விதைகள் வழங்கப்படுவதாக வேளாண் உதவி இயக்குநர் காளிமுத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பழநி அருகே தொப்பம்பட்டி பகுதியில் டிசம்பர் மாதத்தில் மானாவாரியாக சூரியகாந்தி சாகுபடி செய்யும் போது பனி மற்றும் காலநிலையை கொண்டு ஒரு பயிர் சாகுபடியை முழுமையாக செய்யலாம். எனவே, சூரியகாந்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தேசிய உணவு எண்ணெய் இயக்கம் திட்டத்தின் கீழ் 1 ஹெக்டருக்கு 5 கிலோ சூரியகாந்தி விதை 50% மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
1 கிலோ சூரியகாந்தி விதையின் விலை ரூ.635. இதற்கான மானியம் ரூ.317 ஆகும். சூரியகாந்தி சாகுபடி செய்த பின் மகசூல் அதிகரிக்க இடுபொருட்கள் மற்றும் உர செலவிற்கும், ஆட்கூலி செலவிற்கு 1 ஹெக்டருக்கு ரூ.2 ஆயிரத்து 400 பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது. எனவே, ஆர்வமுள்ள விவசாயிகள் தங்களது சிட்டா மற்றும் ஆதார் அட்டை நகலுடன் சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி மானியம் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.