பரமக்குடி, மே 31: தேனியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திடலில் யூஎஸ்ஏ அத்தலடிக் அகாடமி சார்பில் மாநில அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
ஓட்டப்போட்டி, தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடந்தன. இதில் பரமக்குடியை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் 18 தங்கம், 18 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் அருண் ஆகியோருக்கு பொதுமக்கள், பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.