சென்னை: தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட 6 பேரின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 7 சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் வருகிற 29ம் தேதியுடன் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்பிக்களை தேர்ந்தெடுக்க ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்புமனு தாக்கல் கடந்த 24ம் தேதி முதல் 31ம் தேதி (நேற்று முன்தினம்) வரை நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர்கள் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், கிரிராஜன் ஆகியோரும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர் ஆர்.தர்மர் மற்றும் காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் ஆகிய 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுதவிர 7 சுயேச்சை வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த 13 வேட்புமனுக்களும் தேர்தல் நடத்தும் அதிகாரியும் சட்டப்பேரவை செயலாளருமான கி.சீனிவாசன் முன்னிலையில் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதில் திமுக 3, அதிமுக 2, காங்கிரஸ் 1 ஆகிய 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 7 சுயேட்சை வேட்பாளர்களுக்கு எம்எல்ஏக்கள் யாரும் முன்மொழியாததால் அந்த 7 பேரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.ஜூன் 3ம் தேதி (நாளை) மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். கட்சிகள் சார்பில் போட்டியிடுபவர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற வாய்ப்பு இல்லை. இதனால், தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்பி பதவிக்கு கட்சிகள் சார்பில் மனு தாக்கல் செய்த 6 பேர் மட்டும் களத்தில் இருப்பதால், தமிழகத்தில் மாநிலங்களவை வேட்பாளரை தேர்வு செய்ய ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெறாது. முன்னதாக, ஜூன் 3ம் தேதி (நாளை) மாலை 3 மணிக்கு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்களும் வெற்றிபெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அதற்கான சான்றிதழையும் வழங்கிவிடும்….