திருச்சி, ஜூன் 27: திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர் முகாம் மாநகர போலீஸ் கமிஷனர் தலைமையில் நேற்று நடந்தது. தமிழக அரசின் உத்தரவின்படி, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில் மக்களுடன் முதல்வர் முகாம், போலீஸ் துறை இயக்குநர், மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர்களிடம் கொடுக்கப்பட்ட புகார் மனுக்களின் மீது தீர்வு கண்டறியப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று இச்சிறப்பு முகாமில் பொதுமக்கள் நேரில் வருகை தந்து கொடுத்த 47 மனுக்களை பெற்று, மனுக்கள் மீது உரிய தீர்வு காண சம்மந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பி, தக்க அறிவுரை வழங்கினார்.
மேலும் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட ‘மக்களுடன் முதல்வர்’ முகாம், முதலமைச்சரின் தனிப்பிரிவு, போலீஸ் துறை தலைமை இயக்குநரிடம் கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் மற்றும் தபால், ஆன்லைன் ஆகியவற்றின் மூலமாகவும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 958 மனுக்களில் 876 மனுக்களுக்கு தீர்வு பெறப்பட்டது. மீதமுள்ள 82 மனுக்கள் சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சிறப்பு குறைதீர்ப்பு முகாமில் பெறப்பட்ட 765 மனுக்களில் 451 மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டும், மீதமுள்ள மனுக்கள் மீது முறையான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில், போலீஸ் துணை கமிஷனர் (வடக்கு), போலீஸ் சரக உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.