சென்னை: அரசு ஐடிஐ மாணவர்கள் எம்டிசி பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: கொரோனா தொற்று பரவல் காரணமாக தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்கான வகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது அரசு அறிவித்துள்ள கூடுதல் தளர்வுகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2021-22ம் கல்வியாண்டுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், பல்வேறு அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட தொடங்கியுள்ளன. அங்கு பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான புதிய இலவச பயண அட்டை அச்சடித்து வழங்குதலில் உள்ள கால அளவு போன்றவற்றை கருத்தில் கொண்டு, மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி அரசு தொழிற்பயிற்சி நிலைய 2021-22ம் கல்வி ஆண்டில் பயிலும் மாணவர்கள், இருப்பிடத்தில் இருந்து பயிற்சி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்குச் சென்று வர தொழிற்பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் சீருடையுடன், இந்த மாதம் (ஆகஸ்ட்) வரை இலவசமாக மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கும்படி நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்கவும் சம்மந்தப்பட்ட உதவி மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது….