திருவொற்றியூர்: மாதவரம் மண்டலத்தில் ரூ.405 கோடி செலவில் புதிய பாதாள சாக்கடை திட்டம் மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் என்று மண்டல குழு தலைவர் நந்தகோபால் உறுதியளித்தார். மாதவரம் மண்டல குழு மாதாந்திர கூட்டம், மண்டல குழு தலைவர் நந்தகோபால் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், உதவி ஆணையர் முருகன், செயற்பொறியாளர் சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் நல பணிகள் குறித்த தீர்மானங்கள் மீது கவுன்சிலர்கள் விவாதம் நடத்தினர்.அப்போது, 28வது வார்டு கவுன்சிலர் கனிமொழி, ‘‘கண்ணபிரான் தெரு, திருவள்ளுவர் தெரு, உடையார் தோட்டம் போன்ற பல தெருக்களில் 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடிநீர் சின்டெக்ஸ் தொட்டிகள் பழுதடைந்து தண்ணீர் வீணாகிறது. தடையில்லாமல் குடிநீர் கிடைக்க இந்த சின்டெக்ஸ் தொட்டிகளை புதிதாக மாற்ற வேண்டும்,’’ என்றார். தொடர்ந்து, குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர், பாதாள சாக்கடை தொடர்பான பிரச்னைகள் மற்றும் பழுதடைந்த சாலைகளை சீரமைத்தல் குப்பைகளை அகற்றுதல், தெரு விளக்குகளை சீரமைத்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை குறித்து கவுன்சிலர்கள் முன் வைத்தனர். இதற்கு, மண்டல குழு தலைவர் நந்தகோபால் கூறியதாவது: பழுதடைந்த சின்டெக்ஸ்களை குடிநீர் வாரிய அதிகாரிகள் உடனடியாக மாற்றி தருவார்கள். மழைக்காலம் முடிந்ததும் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்படும். மாதவரம் மண்டலத்தில் ரூ.405 கோடி செலவில் வருகின்ற மார்ச் மாதத்தில் புதிதாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன….