Wednesday, June 26, 2024
Home » மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க அழைப்பு

மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க அழைப்பு

by Karthik Yash

தர்மபுரி, மே 18: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக, பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட்டுத்துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப, விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி, மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி மற்றும் சென்னையில் செயல்பட்டு வருகின்றன.

மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள், சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் திருநெல்வேலியிலும், மாணவிகளுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம் மற்றும் ஈரோட்டிலும் செயல்பட்டு வருகிறது. மேற்கண்ட விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று, சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7ம் வகுப்பு, 8ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு சேர்க்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்று, சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6ம்வகுப்பு, 7ம் வகுப்பு, மற்றும் 8ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சேர்க்கை நடைபெறும். மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள், வரும் 24ம் தேதி தர்மபுரி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடக்கிறது.

மாணவ, மாணவிகளுக்கு தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, கபாடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை, பளுதூக்குதலில் தேர்வு போட்டிகள் நடக்கிறது. மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள், சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை, www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும் 23ம் தேதி மாலை 5 மணிக்குள், ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களுக்கு, ஆடுகள தகவல் தொடர்பு மையத்தை 95140-00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே, தர்மபுரி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவ, மாணவிகள், தேர்வு போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

8 + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi