திருவில்லிபுத்தூர்: பள்ளி மாணவியை கத்தியை காட்டி கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த கார் டிரைவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து திருவில்லிபுத்தூர் போக்சோ கோர்ட் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் வெனீஸ் குமார் (27). கார் டிரைவரான இவர், கடந்த 30.7.2018 அன்று 10ம் வகுப்பு மாணவி ஒருவரை கத்தியை காட்டி மிரட்டி கடத்தி சென்று ஆளில்லா வீட்டுக்குள் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில், ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், வெனீஸ்குமாரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. டிரைவர் வெனீஸ்குமாருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தனசேகரன் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் ரூபாய் வழங்கவும் பரிந்துரை செய்தார். வெனீஸ்குமாருக்கு 342வது பிரிவின் கீழ் ஓராண்டு சிறைதண்டனை, ரூ.1000 அபராதமும், 366வது பிரிவின் கீழ் 10 ஆண்டு சிறையும், ரூ.1000 அபராதமும், 5(ஐ), 5(எல்) பிரிவுகளின் கீழ் சாகும்வரை ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது….