வலங்கைமான், ஜூன் 25: மாணவர்கள் புதுமையாக சிந்திப்பது அறிவு வளர்ச்சிக்கு உதவும் என்று முனைவர் சூரியகுமார் பேசினார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிவுத்தூண்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்து பலவகைத் தொழில்நுட்ப கல்லூரிகளிலும் ஆண்டுதோறும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிவுத்தூண்டல் நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு வலங்கைமான் பலவகைத் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜான லூயிஸ் தலைமை வகித்தார்.முதல்வரின் நேர்முக உதவியாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார்.
முன்னதாக துறைத் தலைவர் முருகன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் கோயமுத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவை உறுப்பினரும் எழுத்தாளருமான முனைவர் ஆதலையூர் சூரியகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்கள் புதுமையாக சிந்திப்பதும், எந்த ஒரு நிகழ்வு குறித்தும் மாற்று கோணத்தில் பார்ப்பதும் அவர்களுடைய அறிவு வளர்ச்சிக்கு உதவும்.மேலும் மாணவர்கள் ஆய்வு சார்ந்த செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கோலோச்சப் போகிறது. அதற்கு ஏற்ற வகையில் மாணவர்கள் தங்களை இப்போது இருந்தே தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியின் நிறைவில் விரிவுரையாளர் சீதாராமன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.