சென்னை: மாணவர்களின் நலன் கருதி அனைத்து பல்கலைக்கழகங்களின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.சென்னையில் அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி: மாணவர்கள் நலன் கருதி அனைத்து பல்கலைகழகங்களிலும் பருவத்தேர்வுகள் காலவரையின்றி ரத்து செய்யப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு நிலைமை சீரான பின், கல்வியாளர்களுடன் நன்கு ஆலோசித்து தேர்வு நடைபெறும் தேதிகள், தேர்வு நடைபெறும் ஒரு வாரத்திற்கு முன்னர் அறிவிக்கப்படும். அதுவரை கல்விநிறுவனங்களில் செய்முறைத் தேர்வுகள் மட்டுமே நடைபெற அனுமதிக்கப்பட்டுள்ளது.கல்வியின் தரத்தையும், மாணவர்கள் நலனையும் கருதி நன்கு கலந்து ஆலோசித்து தான் தற்போது இந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மாணவர்களை நேரடி வகுப்புகளுக்கு அழைக்ககூடாது என்று அனைத்து கல்விநிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்களை நேரடி வகுப்புகளுக்கு வரச்சொல்லும் கல்விநிறுவனங்கள் குறித்து தெரிவித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வுகளுக்கான பாடங்கள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டு, தேர்வுகளுக்கு தயாராகும் பட்சத்தில் தற்போது மாணவர்களுக்கு ஸ்டடி லீவ் விடப்பட்டுள்ளது. மாணவர்கள் இதை நன்கு பயன்படுத்தி தேர்வுகளுக்கு தயார் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்….