வேலூர், மார்ச் 11: வேலூர் அருகே கீழ்அரசம்பட்டு பகுதியில் நடந்த விழாவில் மாடு முட்டி கட்டிட மேஸ்திரி பரிதாபமாக பலியானார்.வேலூர் அடுத்த நஞ்சுகொண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம்(51), கட்டிட மேஸ்திரி. இவரது மகளை கீழ்அரசம்பட்டு பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். நேற்று கீழ்அரசம்பட்டு பகுதியில் மயானக்கொள்ளை திருவிழா நடந்தது. எனவே, சண்முகம் மகள் வீட்டிற்கு வந்தார்.பின்னர், அப்பகுதியில் நடந்த மாடு விடும் விழாவை பார்க்க சென்றார். அப்போது சீறிப்பாய்ந்து வேகமாக வந்த காளை ஒன்று எதிர்பாராதவிதமாக சண்முகத்தின் மார்பில் முட்டியது. இதில், நிலைகுலைந்து சரிந்து கீழே விழுந்தார்.படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சண்முகத்தை அங்கிருந்த இளைஞர்கள் மீட்டு உடனடியாக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சண்முகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.