பூந்தமல்லி, ஏப். 13: மதுரவாயல் – தாம்பரம் பைபாஸ் சாலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரின் கழுத்தை காத்தாடி மாஞ்சா நூல் அறுத்தது. இதில் அவர் காயம் அடைந்தார். இதுகுறித்து, அந்த வாலிபர் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் மதுரவாயல் போலீசார் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் காத்தாடிகளை யாராவது பறக்க விடுகிறார்களா என்று மதுரவாயல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது, மதுரவாயல் சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட காத்தாடி பறக்கவிட்டுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார், தடை செய்யப்பட்ட காத்தாடி பறக்கவிட்டதாக மதுரவாயலை சேர்ந்த துரை மாணிக்கம் (45), பாலாஜி (24), கணேசன் (43), வேல் (27), அரிகிருஷ்ணன் (27), முரளி (31) ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 6 காத்தாடிகள், 4 நூல் கண்டுகள் மற்றும் 2 லொட்டாய்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாஞ்சாநூல் காத்தாடி பறக்கவிட தடை செய்யப்பட்டுள்ளது. மதுரவாயல் மற்றும் புறநகர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் மற்றும் காத்தாடிகள் பறக்க விடுபவர்கள், விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.