சென்னை: உலக புகழ்பெற்ற கடற்கரை நகரமான கடல் மல்லை என்னும் மாமல்லபுரத்தில் மாசி மகத்தன்று இருளர் இன மக்கள் தங்கள் குலதெய்வமான கன்னியம்மனை வழிபடுவது வழக்கம். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பே இருளர் மக்கன் மாமல்லபுரம் வந்து கடற்கரையில் தற்காலிக குடில்கள் அமைத்து, விழாவுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் சிறப்பாக செய்தனர். மாசிமக, பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரம் கடற்கரையில் இருளர்கள் பாரம்பரிய ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் என இரவு முழுவதும் பவுர்ணமி வெளிச்சத்தில் கடற்கரையில் ஆடி, பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நேற்று அதிகாலையிலேயே எழுந்து கடலில் குளித்து மணலில் செய்த கன்னியம்மன், கடல் கன்னி, சப்த கன்னிகளை வழிபட்டனர். மாசிமகமான நேற்று மகிழ்ச்சியான சுபநிகழ்ச்சிகள் செய்வது குறித்து கன்னியம்மனிடம் குறி கேட்டு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் மற்றும் காது குத்தல், மொட்டை அடித்தல் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை செய்து மகிழ்ச்சி அடைந்தனர். மாசிமக, திருவிழா அன்று கடலில் நீராடுவதால் 21 தலைமுறை பாவங்களும் நீங்கும். மாசிமக பவுர்ணமி அன்று கடலில் நீராடுவதால் வருடத்தின் அனைத்து நாட்களும் நீராடிய காசி, ராமேஷ்வரம் சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்….