‘‘தன் மாவட்டத்திலேயே இலை கட்சியில் கலகம் ஏற்படுத்த வந்துள்ள சின்ன மம்மியை கண்காணிக்க ரகசிய வளையம் அமைத்துள்ளாராமே.. ஏனாம்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘அரசியலில் இருந்தே ஒதுங்குவதாக தேர்தலுக்கு முன் கூறிய சின்ன மம்மி, தற்போது ஆன்மீக சுற்றுப்பயணம் தொடங்கியிருப்பது எல்லோருக்கும் தெரியும். போகிற இடமெல்லாம் இலைக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து, ஒருங்கிணைப்பாளர்களுக்கு கிலியை ஏற்படுத்தி வாராரு. சேலம் மாஜி விவிஐபியின் சொந்த மாவட்டமான மாங்கனி மாவட்டத்தில இன்னையில் இருந்து 2 நாட்களுக்கு சின்ன மம்மி சுற்றி வாராங்க. இதுக்காக இடைப்பாடியிலும், மாங்கனி மாநகரிலும் பல இடங்களில் சின்ன மம்மியை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கு. அதுவுமில்லாம தங்கும் ஓட்டலில் ரகசியமாக சந்திக்க முக்கிய நிர்வாகிகள் பலரும் விருப்பம் தெரிவிச்சிருக்காங்களாம். அப்படி சந்திக்கப் போகும் இலைக் கட்சி நிர்வாகிகள் விவரத்தை கனகச்சிதமாக ரகசியமாக கண்காணித்து பட்டியலை தரணுமுன்னு சில நிர்வாகிகளிடம் மாஜி விவிஐபி உத்தரவு போட்டுருக்காராம். அதனால சின்ன மம்மி போகிற இடமெல்லாம் இணையானவரின் ரகசிய கண்காணிப்பு குழுவும் சுற்றி வர இருக்காம். இத தெரிஞ்சிக்கிட்ட சில நிர்வாகிகள், சின்ன மம்மியை பார்த்தா கட்சியை விட்டு நீக்குவாங்க, இப்பவே நாம நீக்கின மாதிரிதான் இருக்கோம், அதனால தைரியமாக சந்திச்சிப்புடுவோம்னு முடிவு பண்ணியிருக்காங்களாம்… இதனால சேலம் விவிஐபி கலக்கத்தில் இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியனந்தா. ‘‘அதிகாரிகள் புகார் தராததால் இலை கட்சி மாஜி எம்எல்ஏ எஸ்கேப் ஆன தகவலை சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவை பாப்பநாயக்கன்பாளையம் மின் மயானம் வளாகத்தில் இருந்த மரங்களை வெட்டி, ஒரு லோடு நிறைய மரத்துண்டுகளை ஏற்றி கடத்த முயற்சி நடந்திருக்கு. இதை, அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு கட்சி நிர்வாகி தடுத்து நிறுத்தி, லாரியை காவல் நிலையத்துக்கு கொண்டு போனாங்க. போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்ததாம். காரணம், இந்த முறைகேட்டில் மாநகராட்சி அதிகாரிகள் சிலர், மாஜி இலை எம்எல்ஏ ஒருவருடன் கைகோர்த்து செயல்பட்டாராம். இந்த மின் மயானம், மாநகராட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த மயான வளாகத்தில் இருக்கும் மரங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள்தான் பொறுப்பு. அதனால மாநகராட்சி அதிகாரிகளை கைது செய்ய முடியாமல் போலீசார் திகைச்சு போயிட்டாங்க… ‘எங்க வளாகத்தில இருந்த மரங்களை வெட்டி கடத்துறாங்க…’’ என்று புகார் கொடுக்க வேண்டிய அதிகாரிகளே இப்படி கடத்தினா நாங்க என்ன செய்ய முடியும் என போலீசார் கைவிரிச்சுட்டாங்களாம். இலை மாஜி எம்எல்ஏ இந்த மரங்களை தடாகம் ரோட்டில் உள்ள ஒரு செங்கல் சூளைக்கு கொண்டு செல்ல திட்டம்போட்டு, மாநகராட்சி அதிகாரிகள் சிலருடன் கைகோர்த்துள்ளாராம். ஆனால், புகார் கொடுக்க ஆள் இல்லாததால் எம்எல்ஏ எஸ்கேப் ஆனாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘உதயமான மாஜி அமைச்சரின் தில்லாலங்கடி பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அமெரிக்க கணினி நிறுவனத்தின் கிளை பெங்களூரூவில் உள்ளது. அங்கு பயன்படுத்திய, 12 ஆயிரம் கம்ப்யூட்டர்களை உதயமானவரிடம் அளித்து மாணவர்கள் உள்பட கல்வித்துறையினருக்கு அளிக்கச் சொன்னதாம் நிறுவனம். ஆனால், உதயமானவர் தனக்கு வேண்டியவர்களுக்கு அளித்துவிட்டாராம். இந்நிலையில் ஆட்சி மாறியதால், கம்ப்யூட்டர் நிலைப்பற்றி அறிய தனியார் நிறுவனம் விசாரித்தபோதுதான் அது மாணவர்களே செல்லவில்லை என்பது தெரியவந்தது. அதனை ஆய்வு செய்த கல்வி அதிகாரிகள், ஒரு மாவட்டத்தில் அதுவும் ஒரு தொகுதியில் மட்டும் இவ்வளவு கணினியை கொடுத்தது ஏன் என கேள்வி கேட்டு, அந்த கணினிகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட பள்ளிகளில், மாணவர்களின் பொது பயன்பாட்டிற்காக பயன்படுத்த வேண்டும். தனியார் யாரும் அதை பயன்படுத்தக்கூடாது என மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டு கடிதம் அனுப்பி விட்டதாம். அதனைத்தொடர்ந்து, முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் அனைத்திற்கும், கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘‘உதயமான மாஜி வழங்கிய கணினியை உடனே பள்ளிகளில் ஒப்படைத்து, அதனை பள்ளியின் பயன்பாட்டிற்காக பயன்படுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார். உதய மாஜி, இந்த கணினிகளை ஆசிரியர்களுக்கு வழங்கிய போது, ‘இதை உங்கள் வீட்டு சொந்த பயன்பாட்டிற்காக வைத்துக்கொள்ளுங்கள்’ என கூறியிருந்தார். அதனை நம்பி ஆசிரியர்கள் அவர்களது மகன், மகள் ஆகியோர் பயன்படுத்தினர். இதில், பாதிக்கு மேற்பட்ட கணினிகள் உடைந்து, பழுதாகி வழங்கப்பட்டது. இதனால், இதை பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் பழைய காயலாங்கடைக்கு ஆசிரியர்கள் விற்றுவிட்டனர். அது குறித்த எந்த பைலும் மாவட்ட நிர்வாகத்திடம் இல்லையாம். தற்போது இந்த கணினியை எப்படி மீட்டெடுப்பது என தெரியாமல் கடந்த ஆட்சியில் இருந்து தற்போது வரை உள்ள முதன்மைக்கல்வி அலுவலர்கள் தவித்து வருகிறார்களாம். யார், யார் கணினி வாங்கினார்கள் என்று இப்போது லிஸ்ட் தயாரிக்கும் பணி நடந்து வருகிறதாம். தன் பெருமையை பறைசாற்றிக் கொள்ள மற்றவர்களை ஊறுகாய் ஆக்குவதா என்று என்று கல்வியாளர்கள் கொதித்து போய் உள்ளனர்…’’ என்றார் விக்கியானந்தா. …